புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதா.?

20

புதுக்கோட்டை சங்கமம்விடுதி அடுத்த குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்தபோது நீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டு துர்நாற்றம் வீசியதாக தகவல் பரவியது.

குடிநீர் மாதிரியையும், தொட்டியில் இருந்த கழிவையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணத்தை மர்ம ஆசாமிகள் கலந்து இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரிசோதனை முடிவில், குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீரில் தொற்று எதுவும் இல்லை என்றும், குடிப்பதற்கு உகந்தது என்றும் ஆய்வு முடிவு வந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருந்ததால், குப்பைகள் அடியில் இருந்ததை மாட்டுச் சாணம் என நினைத்ததாக கூறப்படுகிறது.